புதுடில்லி : உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில், 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, ராணுவ அமைச்சகம் தடை விதித்துள்ளது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் ஆயுதங்கள் உள்ளிட்ட பல பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில், தற்சார்பு இந்தியா திட்டம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தார்.இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ௧௦௧ பொருட்களை இறக்குமதி செய்ய, ராணுவ அமைச்சகம் தடை விதித்தது. இந்தப் பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின், மேலும் 108 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகளை, 2023ம் ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முப்படைகளில் பயன்படுத்தப்படும், 2,5௦௦க்கும் அதிகமான பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், மேலும், 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை, மூன்று ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்தப்படும்.இந்தப் பொருட்கள், இந்திய தொழிற்சாலைகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படும்.
351 பொருட்களில், 172 பொருட்கள், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்படும். 89 பொருட்கள், 2023ம் ஆண்டுக்குள்ளும், 90 பொருட்கள் 2024ம் ஆண்டுக்குள்ளும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் அன்னிய செலவானி, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE