சென்னை: 'மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்த தி.மு.க.,வின் வெற்றி செல்லுபடி ஆகிவிட்டதால், இனி தள்ளுபடி பற்றி அக்கறை இல்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று முழங்கி, மக்களின் ஆவலை துாண்டி, வெளிப்படையான நம்பிக்கை மோசடியை அரங்கேற்றி இருக்கிறது, தி.மு.க., அரசு.'அக்கா வாங்க... அண்ணே வாங்க... உடனே கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்குங்க; நாளைக்கு நம்ம ஆட்சிதான்; வந்த உடனே மொத்த கடனும் ரத்து' என்று, முழங்கிய உதயநிதி மக்களுக்கு செய்தது நம்பிக்கை துரோகம் இல்லையா?

மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்த தி.மு.க.,வின் வெற்றி செல்லுபடி ஆகிவிட்டதால், இனி அவர்களுக்கு தள்ளுபடி பற்றி அக்கறை இல்லை. அதாவது, நகை கடன் தள்ளுபடி ஆகவில்லை. அந்த திட்டம் தள்ளுபடி ஆகிவிட்டது. ஐந்து சவரன் நகைக்கு குறைவாக அடமானம் வைத்து கடன் பெற்ற அனைவருக்கும், மொத்த கடன் ரத்தாக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE