புதுடில்லி :ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய அடிப்படையில் 5 லட்சம் 'டோஸ்' கோவாக்சின் தடுப்பூசியை இந்தியா அனுப்பியுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் கையில் சிக்கிய பின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.ஆப்கனில் தலிபான் அரசை இந்தியா உட்பட எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் ஆப்கன் மக்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவிகள் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழியாக 50 ஆயிரம் டன் கோதுமையை லாரிகள் வாயிலாக அனுப்ப இந்தியா முடிவு செய்து உள்ளது.
இதற்கான நடைமுறைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் ஆலோசித்து வருகின்றன.முதல் கட்டமாக மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை ஆப்கனுக்கு விமானம் வாயிலாக டிச., 11ல் இந்தியா அனுப்பி வைத்தது. இவை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆப்கனில் கொரோனா பரவியுள்ளது. இதைஅடுத்து 5 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை ஆப்கனுக்கு இந்தியா அனுப்பி வைத்தது. இது, காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஆப்கனுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE