சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், தற்காலிகமாக துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன. கடந்த ஆட்சியில், ஓராண்டு தற்காலிக அடிப்படையில் தான் அந்த கிளினிக்குகள் திறக்கப்பட்டன. செவிலியர்கள் இல்லாமல் இயங்கி வந்த அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டதுடன், அங்கு பணிபுரிந்த 1,820 டாக்டர்களும் கோவிட் பணியில் உள்ளனர். இவர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மார்ச் 31 வரை கோவிட் பணியில் ஈடுபடுவார்கள். அந்த திட்டம் முடிந்து விட்டது.
தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாமல் இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு, டாக்டர்கள் அறிவுறையுடன் சிகிச்சை பெறலாம். இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.
அக்கறையில்லை

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகர பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.