கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருளாதார ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் இலங்கை , பெரிதும் சார்ந்துள்ள சுற்றுலா துறையின் வருவாய் சரிவடைந்துள்ளது. நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டு வேளாண் பொருட்கள் உற்பத்தி குறைந்தது. விலைவாசி உயர்ந்தது. பணவீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சத்திற்கு சென்றுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.
இந்தியா, ஓமன் நாடுகளிடம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசு பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில் பொருளாதார ஊக்கச் சலுகை திட்டத்தை இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே கூறியதாவது:இம்மாதம் முதல் 22 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு பொருளாதார ஊக்கச் சலுகை திட்டம் அமலுக்கு வருகிறது. இதன்படி 15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். 1 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். தோட்டப் பயிர் ஊழியர்களின் குடும்பத்திற்கு மாதம் தோறும் தலா 15 கிலோ கோதுமை இலவசமாக தரப்படும். என்றார்.