திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பெண் ஊழியர் ஒருவர், விவசாயியிடம் கடன் பணத்தைக் கேட்டு மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 65; விவசாயி. இந்திய விவசாய முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர். இவர், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள தேசிய வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாய கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை வசூலிக்க, நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் ரிலையன்ஸ் ஏர்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர், ரகோத்தம்மனுக்கு மொபைல் போனில் பேசியுள்ளார்.

அவர்களது உரையாடல் வருமாறு:
பெண் ஊழியர்: ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி.,யில் இருந்து பேசுறேன் சார். நீங்க பேங்க்ல லோன் எடுத்து இருக்கீங்களா?
விவசாயி: (பேங்க் பெயரைச் சொல்லி) அதில் லோன் எடுத்து இருக்கேன். உங்களுக்கு என்ன?
ஊழியர்: ஏன் உங்களுக்கு சொல்லலையா, உங்க பேங்க்ல ரிலையன்ஸ்க்கு பார்வர்டு பண்ணிட்டாங்கன்னு.
விவசாயி: அது எப்படி அந்த பேங்க்ல கடன் வாங்குனா ரிலையன்சுக்கு பார்வர்டு பண்ணுவாங்க. யார் கடன் கொடுக்கிறது. யார் கேட்கிறது?
ஊழியர்: நீங்க வருஷக்கணக்கா கட்டாம ஒக்காந்து இருப்பீங்க. நாங்க கேட்க கூடாதா. நீங்க எங்களுக்குத்தான் பதில் சொல்லியாகனும்.
விவசாயி: உன்கிட்ட கடன் வாங்கல. உன்கிட்ட வாங்குனா தான் உனக்கு பதில் சொல்லணும்.
ஊழியர்: நீங்க கிளம்பி வாங்க முதல்ல, இந்த ரூல்ஸ்லாம் பேங்க்ல வந்து பேசுங்க.
விவசாயி: நீ வைமா போனை, நீ ஏன் எனக்கு போன் பண்ற?
ஊழியர்: யோவ் நான்தான்யா கால் பண்ணனும். பேங்க்குக்கு வா. முதல்ல இந்த லா எல்லாம் பேசிட்டு இருக்காத.
விவசாயி: என்னது யோவ் வா...? இரு கலெக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்.
ஊழியர்: என்னது கலெக்டர் கிட்ட போறியா. போய் குடு போ. என்னோட பேரு அஸ்வினி தான் போய் சொல்லு போ.
விவசாயி: உங்க கிட்ட கடன் வாங்குனா சாவ சொல்றீங்களா?
ஊழியர்: செத்தாக்கூட கடன கட்டிட்டு செத்து போங்க பரவாயில்லை. கடன கட்டிட்டு சாவுங்க.
விவசாயி: வா வா நீ தான வசூல் பண்ணுவ வா.இந்த உரையாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.