மும்பை : கடந்த ஆண்டில் ஏராளமான நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டதை அடுத்து, அவற்றுக்கான ஆலோசனைகளை வழங்கி, பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்ட வங்கிகள், இதற்கு முன் இல்லாத அளவுக்கு, நல்ல வருமானத்தை பார்த்துள்ளன.

கடந்த 2021ம் ஆண்டில், இதுவரை இல்லாத வகையில், 63 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன.இதையடுத்து, இப்பங்கு வெளியீடுகளை நிர்வகித்து வந்த முதலீட்டு வங்கிகள், அதற்கான ஆலோசனைக் கட்டணமாக கிட்டத்தட்ட 8,250 கோடி ரூபாயை பெற்றுள்ளன.
இது, இதுவரை பெறாத ஆலோசனை கட்டணமாகும். கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 8.5 சதவீதம் அதிகம்.முதலீட்டு வங்கிகளில், அதிகளவிலான கட்டண வருவாயை, 'எஸ்.பி.ஐ., கேப்பிட்டல்' பெற்றுள்ளது. இந்நிறுவனம் 652 கோடி ரூபாய் வருவாயை, ஆலோசனை கட்டணமாக கடந்த ஆண்டில் பெற்றுள்ளது.

புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக மட்டுமின்றி; நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் வாயிலாகவும், வங்கிகள் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி உள்ளன.முந்தைய மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டில், 9.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE