பெங்களூரு: பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, 3 கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
இவரை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வந்தனர். அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நாளை(ஜன.,6) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள பி.எம்., சாலையில் காரில் சென்றுக்கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
4 பேர் கைது
இந்த நிகழ்வில், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் ராமகிருஷ்ணன், இவரின் உதவியாளர் நாகேஷ் (ராஜேந்திர பாலாஜி சென்ற காரை ஓட்டியவர்), ராஜேந்திர பாலாஜியின் காருக்கு முன்பு பாதுகாப்புக்காக காரை ஓட்டிச்சென்ற ஓசூர் நகர செயலாளர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட ஐ.டி., பிரிவு தலைவர் பாண்டியராஜன் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்தபோது ராஜேந்திர பாலாஜிக்கு இரண்டு முன்னாள் அதிமுகஅமைச்சர்கள் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE