சென்னை : ''தி.மு.க.,வின் ஆதரவு இருப்பதால் தான், சசிகலா மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அ.தி.மு.க., கட்சி கொடியை பயன்படுத்தியதுடன், அக்கட்சியின் பொதுச்செயலர் என்ற பெயரில் அறிக்கை வெளியிடுகிறார். சசிகலா சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி, சைதாப்பேட்டை, 17வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை 12ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ஜெயகுமார் கூறியதாவது: தி.மு.க.,வின் ஆதரவு இருப்பதால் தான், சசிகலா மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர், தி.மு.க.,வின் 'பி டீம்' ஆக இருக்கலாம். 'அம்மா கிளினிக்'கை பொறுத்தவரை, தேவையான டாக்டர்கள் நியமனம் செய்திருந்தோம். சென்னையில் பல்வேறு இடங்களில் நானே திறந்து வைத்துள்ளேன். அமைச்சரிடம் காண்பிக்க தயார். அவர் என்னோடு வருவாரா?
அரசர்கள் மாறுவேடத்தில் செல்வது போல், முதல்வர் ஸ்டாலின், ரேஷன் கடைகளுக்கு மாறு வேடத்தில் செல்ல வேண்டும். அங்கு, பொது மக்கள் அரசை எப்படி எல்லாம் பேசுகின்றனர் என்று, அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE