கோவை: கடந்த இரண்டு வாரங்களில் பஞ்சு விலை கேண்டிக்கு பத்தாயிரம் வரை உயர்ந்துள்ளதால், ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.

ஜவுளித்துறைக்கு முக்கிய ஆதாரம் பருத்தி. இதன் விளைச்சல் வெகுவாக குறைந்ததால், பஞ்சுக்கு நம் நாட்டில் தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த மாதம், 356 கிலோ எடை கொண்ட ஒரு கேண்டி 65,000 ரூபாய் ஆக இருந்தது. தற்போது 75,000 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.இரண்டே வாரங்களில் ஒரு கேண்டி பஞ்சு 10,000 ரூபாய் உயர்ந்துள்ளது, ஜவுளித்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதன் காரணமாக, நுாற்பாலை உற்பத்தியாளர்கள் நுால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஜவுளி ரகங்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு எல்லைக்கு மேல் ஜவுளிரகங்களின் விலையை உயர்த்த முடியாது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், ஜவுளித்துறையினர் திகைக்கின்றனர்.

இது குறித்து, ஜவுளித்துறையினர் கூறியதாவது:
யூகவணிக வர்த்தகத்தின் போக்கு, திசைமாறி போய்க்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இரண்டே வாரங்களில் பஞ்சு விலை, கேண்டிக்கு 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இதுவரை இது போல் ஒரு கேண்டி பஞ்சு, 75,000 ரூபாய்க்கு விற்றதில்லை. இதனால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். அப்போது பஞ்சு விலை குறையும். அதே சமயம் நம் நாட்டில் பருத்தி விளைச்சலுக்கு, தேவையான ஆயத்த பணிகளை விவசாயத்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE