புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள், வார்டன்கள் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. கைதிகள் தாக்கியதில் நான்கு வார்டன்கள் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி, காலாப்பட்டில் அமைந்துள்ள மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 250க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.விசாரணை கைதிகள் யார்டில் உள்ள 190 பேர், தங்களுக்கு தமிழக சிறைகளில் வழங்குவது போல் பீடி, சிகரெட் உள்ளிட்டவை வழங்க கோரி, நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.
சில கைதிகள் சிறை கட்டடத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கைதிகள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி., மற்றும் தீயணைப்பு துறையினருக்கு சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
அதையடுத்து, எஸ்.பி., தீபிகா தலைமையில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் சிறைக்கு சென்றனர்.இதற்கு முன்பாக, கட்டடத்தின் மேல் இருந்தவர்களை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, கைதிகளுக்கும், வார்டன்களும் இடையே தள்ளுமுள்ளு, தகராறு ஏற்பட்டது.
கைதிகள் தாக்கியதில் 4 வார்டன்கள் காயமடைந்தனர்.காயமடைந்த வார்டன்கள், காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.எஸ்.பி., தீபிகா மற்றும் தீயணைப்பு துறையினர் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறை வளாகத்திற்குள் அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE