சண்டிகர்: பஞ்சாபில் பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை என்பதால், பிரதமரின் பாதுகாப்பு குறித்து அரசியல் செய்து வருவதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 15 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து கூறியதாவது: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி 70,000 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் 500 பேர் மட்டுமே வந்திருந்தனர். பிரதமர் அவமானத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார். பிரதமர் மோடி பா.ஜ.,வின் பிரதமர் மட்டுமல்ல, அவர் இந்தியாவின் பிரதமர். அவரின் உயிருக்கு பஞ்சாபில் அச்சுறுத்தல் இருந்ததாக கூறி, பஞ்சாபியத்தை அவமதிக்க முயற்சிக்கின்றனர். பஞ்சாபில் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதை பற்றி பா.ஜ.,வுக்கு தெரியும். எனவே, அவர்கள் பிரதமரின் பாதுகாப்பு குறித்து அரசியல் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE