புதுடில்லி: பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,10) மீண்டும் தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு இதனை விசாரணை நடத்தும். இந்த விசாரணை குழுவில், சண்டிகர் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வுத்துறை ஐஜி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர், பஞ்சாப் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் இடம்பெறுவார்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE