மும்பை-மஹாராஷ்டிராவில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனையில் இருந்து, 11 சிசுக்களின் மண்டை ஓடு மற்றும் 54 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில் வர்தா மாவட்டத்தின் அர்வி தாலுக்காவை சேர்ந்த சிறுவன், 13 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி அவரை கர்ப்பமாக்கி உள்ளார். சிறுமியின் கருவை கலைக்கும்படி சிறுவனின் பெற்றோர் மிரட்டி உள்ளனர். 'இது குறித்து புகார் அளித்தால் சிறுமியை பற்றி தவறான தகவல்களை பரப்பி குடும்ப பெயரை கெடுத்துவிடுவோம்' என, சிறுமியின் பெற்றோரை மிரட்டி உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய பணம் செலுத்தி ஏற்பாடுகளை செய்தனர். சிறுமிக்கு கருக்கலைப்பும் செய்யப்பட்டது. இந்த சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனின் பெற்றோரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
அப்போது மருத்துவமனையில் இருந்த உயிரிவாயு ஆலையில், 11 சிசுக்களின் மண்டை ஓடு மற்றும் 54 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.இது தொடர்பாக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரேகா மற்றும் செவிலியர் ஒருவரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE