விருதுநகர், :''விருதுநகர் மாவட்டத்தில் 2021--22ம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை ரூ.25.77 லட்சம் மானியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுவதாக,'' கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும் விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்தவும் அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் வேளாண் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிட, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.சிறிய, பெரிய உழுவை இயந்திரம், பவர் டில்லர், களை எடுக்கும் கருவி, பவர் ஸ்பிரேயர் என 37 கருவிகளுக்கு ரூ.25.77 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. பயனடைய விரும்புவோர் உழவன் செயலியில் பதிவு செய்து தொடர்ந்து மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in மூலமாக பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியத்தை பெற்று பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளரையும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார் விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்துார் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரையும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.