சென்னை ---கொரோனா ஊரடங்கு காலத்தில், தன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை, முக கவசம் அணியாமல் ரஜினிகாந்த் சந்தித்து, பொங்கல் வாழ்த்து கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், தன் புதிய படம் வெளிவரும்போதும், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து, வாழ்த்து கூறுவார்.அதேபோன்று, பொங்கல் திருநாளான நேற்று, நடிகர் ரஜினி ரசிகர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தனர்.
அவர்களில் பலர் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல், கூட்டமாக ரஜினி வீட்டு வாசலில் நின்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினி, வீட்டு வளாகத்தின் நுழைவு கேட்டின் உள் பக்கமாக சிறிய பெஞ்சில் ஏறி நின்றவாறு, ரசிகர்களை சந்தித்து, பொங்கல் வாழ்த்து கூறினார்.அப்போது அவர், கொரோனா விதிகளின் படி முக கவசம் அணிந்திருக்கவில்லை. ரசிகர்கள் பலர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு, புத்தகங்களையும், காகிதங்களையும் நீட்டினர்.அவர்களில் சிலரிடம் புத்தகங்களை வாங்கிக் கொண்டார்.
பின், கையெடுத்து கும்பிட்டும், ரசிகர்களை பார்த்து கையசைத்தும் காட்டி விட்டு, பெஞ்சில் இருந்து கீழே இறங்கி, வீட்டுக்குள் சென்றுவிட்டார்.இதை தொடர்ந்து, தன் டுவிட்டர் பக்கத்தில், நடிகர் ரஜினி வெளியிட்ட வாழ்த்து செய்தி:அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகுது.இதில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள, எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE