சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் விட்டு தி.மு.க., பிரமுகர் நடத்திய கோலப்போட்டி கொரோனாவை பரப்பும் போட்டியாக முடிந்தது.
தமிழகத்தில் கொரோனாவின் 3வது அலையும்,ஒமைக்ரான் பரவலும் வேகம் எடுக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முக்கிய நாட்களில் பக்தர்களை கூட கோயில்களில் அனுமதிப்பதில்லை. ஆனால் சிங்கம்புணரியில் ஜன.13 ம் தேதி தி.மு.க., பிரமுகர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கோலப் போட்டி நடத்தினார். 16 வது வார்டு பகுதியில் இப்போட்டி நடத்தப்பட்டது. பங்கேற்கும் அனைவருக்கும் பரிசு என்று அறிவிக்கப்பட்டதால் 150க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தோடு போட்டியில் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பனுடன் வந்த கட்சியினர் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தனர். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. பரிசு வாங்க வந்திருந்த மக்களையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தவில்லை. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் நிலவியது. போட்டியை நடத்திவிட்டு பரிசுகளை வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கியிருக்கலாம், ஆனால் மேடை போட்டு கூட்டத்தை கூட்டி பரிசு வழங்கியது சமூக ஆர்வலர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE