கரூர்: கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடியில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால், அறுவடை இயந்திரம் கிடைக்காமல், விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சம்பா சாகுபடியும் தொடர்ந்தது. மேலும், மழையும் தொடர்ந்த நிலையில், பயிரிடப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. குறிப்பாக, காவிரியாறு பாயும் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை பஞ்., யூனியன்கள், அமராவதி ஆறு பாயும் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் பகுதிகளில் நெற்பயிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், நெல் அறுவடை இயந்திரமும் பற்றாக்குறையாக உள்ளதால், விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'சம்பா சாகுபடி அறுவடை தொடங்கிய நிலையில், கரூர் மாவட்டத்தில், அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள கூலி ஆட்கள், 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்று விடுவதால், அறுவடை பணிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. மேலும், நடப்பாண்டு தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில், சம்பா சாகுபடி பரப்பளவு முன் கூட்டியே அதிகரித்தது. இதனால், பெரும்பாலான நெல் அறுவடை இயந்திரங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு சென்று விட்டன. அந்த பகுதிகளில், நெல் அறுவடை நிறைவு பெற்ற பிறகே, கரூர் மாவட்டத்துக்கு இயந்திரங்கள் வரும் என தெரிகிறது. ஆனால், முற்றிய நெல்லை உடனடியாக அறுவடை செய்ய ஒரு மணி நேரத்துக்கு, 3,000 முதல், 3,200 ரூபாய் வரை வாடகை தர வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு சார்பில் நெல் அறுவடை இயந்திரங்களை, ஏற்பாடு செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE