பொதட்டூர்பேட்டை : தொழிலின் ஆண்டு கணக்கு, மார்கழியுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து, தறிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தை மாதத்தில், நல்ல நாள் பார்த்து, புது கணக்குடன் மீண்டும் தறிகள் இயக்கத்திற்கு வரும் என நெசவாளர்கள் அறிவித்துள்ளனர்.
நெசவு தொழிலில், கைத்தறிகள் ஆதிக்கத்தில் இருந்த காலம் முதல் இன்று விசைத்தறிகள் கோலோச்சும் நாள் வரை, தொழில் ஆண்டு கணக்கு, மார்கழியுடன் முடிவுக்கு வருவது வழக்கம்.அதன் படி, கடந்த 13ம் தேதியுடன் தறிக்கூடங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன. விசைத்தறிகள் அதிகளவில் இயங்கும், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், நல்லவானம்பேட்டை, வங்கனுார், மத்துார், புச்சிரெட்டிபள்ளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது தறிக்கூடங்கள் விடுமுறையில் உள்ளன.
நெசவாளர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் முழுமையாக திளைத்துள்ளனர். இந்த மாதத்தில் நல்ல நாள் பார்த்து, மீண்டும் தறிகள் இயக்கத்திற்கு கொண்டு வரப்படும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு தை மாதத்தில் புது கணக்குடன் தொழில் ஆண்டு துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE