குருகிராம் : ஹரியானாவில் ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி 125 கோடி ரூபாய் மோசடி செய்த எல்லை பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி அவரது மனைவி உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு குருகிராம் மாவட்டம் மானேசரில் உள்ள என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் அதிகாரியாக பணியாற்றியவர் பிரவீன் யாதவ்.இவர் தேசிய பாதுகாப்பு படை வளாகத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் 125 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் யாதவை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் நேற்று கூறியதாவது:
பி.எஸ்.எப். அதிகாரி பிரவீன் யாதவ் பங்குச் சந்தையில் 60 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்க மோசடியில் ஈடுபட முடிவு செய்தார்.இதற்காக தேசிய பாதுகாப்பு படையின் ஐ.பி.எஸ். அதிகாரி என பலரிடமும் கூறி அதன் வளாகத்தில் கட்டுமான பணிகளின் ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக 125 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார்.இவரது சகோதரி ரிது யாதவ் மேலாளராகஇருக்கும் தனியார் வங்கியில் என்.எஸ்.ஜி.பெயரில் போலி கணக்கு துவங்கி மோசடி தொகையை முதலீடு செய்துள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் அவர் அகர்தலாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால் பணியிட மாற்றத்தை விரும்பாமல் தன் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து அவரது மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கு பதிவு செய்து பிரவீன் யாதவ் அவரது மனைவி மம்தா சகோதரி ரிது யாதவ் மோசடிக்கு உதவிய மற்றொருவர் என நான்கு பேரை கைது செய்துள்ளோம்.
பிரவீன் யாதவ் வீட்டில் சோதனை நடத்தி 14 கோடி ரூபாய் ரொக்கம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பி.எம்.டபிள்யூ. மற்றும் மெர்சிடிஸ் உட்பட ஏழு சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE