'வனத்தில் இயற்கை தாவரங்களை அழிக்க கூடிய, களைத்தாவரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனை அழிக்கும் பணியில் தன்னார்வலர்களுடன் ஈடுபட்டுள்ளோம்,' என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேற்கு தொடர்ச்சிமலையில், உயிர்பன்மை செறிவு நிறைந்த பகுதியாக, ஆனைமலை வனப்பகுதி கடந்த, 2007 - 08ல் அறிவிக்கப்பட்டது. வனப்பகுதியில், பல வன உயிரினங்கள் வாழும் சூழ்நிலை உள்ளதுடன், பல்வேறு வகையான தாவர இனக்காடுகள், தட்பவெப்பநிலை, உயரம் கொண்டதாக இவ்வனப்பகுதி உள்ளது.
இந்நிலையில், வனத்தில் வனவிலங்குகளுக்கு உணவாக கூடிய தாவரங்களை அழிக்க கூடிய, 'மோண்டனா ஹிமிசிக் போலியா' என்ற அயல்நாட்டு களைத்தாவரம் அதிகளவு வளர்ந்து வருகிறது.வனத்தில் பரவியதுகடந்த, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, இந்த களை தாவரம் பரவி வருகிறது. பொக்கே போன்றவை எடுத்து செல்பவர்கள், விதைகள், பூக்களை அப்படியே துாவிச் சென்றதால் களை தாவரம் வளர்ந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வால்பாறை செல்லும் ரோட்டில், 16வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பரவ துவங்கியுள்ளது. அதில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் முழுவதுமாக பரவியுள்ளது. இது, குறைந்தளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதிகளவு பகுதியில் பரவக்கூடிய தாவரமாகும்.
உணவு சங்கிலி பாதிப்பு
இந்த களை தாவரம், இயற்கையாக வளரக்கூடிய மரச்செடிகள், தாவரங்கள் வளர்ச்சியை முற்றிலும் பாதிக்கச் செய்கிறது. இதனால், தாவர உண்ணிகளின் உணவுத்தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், வனவிலங்குகளின் உணவுச்சங்கிலி தொடர்பில், இப்பகுதியில் வன உயிரினங்களின் இயற்கை சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், உணவு சங்கிலி அறுபடுவதுடன், வனவிலங்குகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது.
யானைகள் உணவு சங்கிலி உள்ள பகுதியில் இந்த தாவரங்கள் அதிகளவு படர்ந்தால், அவை உணவை தேடி குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது.விதை துாவ திட்டம்களை தாவரங்கள் அதிகளவு படர்வதை கட்டுப்படுத்த, வனத்துறையினர், மானாம்பள்ளி வனச்சரக பகுதிகளில் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து அகற்றினர். ஊரடங்கு காரணமாக தொடர்ந்து இப்பணிகள் முழுமையாக மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'மானாம்பள்ளி வனச்சரக பகுதிகளில், முதற்கட்டமாக, இரண்டு யானைகள் சாப்பிடக்கூடிய பகுதியில் வளர்ந்துள்ள களை செடிகள் அகற்றப்பட்டுள்ளன. ரீபாரஸ்டேஷன், இயற்கை தாவர விதை படுக்கை அமைக்கப்பட்டு, அங்கு விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை வளரும் போது, களைச்செடிகள் வளராது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.
உடுமலை
உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், அரிய வகை தாவர உண்ணிகள் அதிகளவு உள்ளன. இயல்பான வனச்சங்கிலி சுழற்சியில், தாவரங்களும், தாவர உண்ணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்நிலையில், உடுமலை மற்றும் அமராவதி வனசரகங்களின் மையப்பகுதியில் மூணாறு ரோட்டோரத்தில், பல இடங்களில் சீமை கருவேலன் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
தண்ணீர் தேவைக்காக இடம் பெயரும், யானை மற்றும் மான்கள், அம்மரத்தில் இருந்து விழும் விதைகளை உண்கின்றன. இவ்வாறு, வனத்தின் அனைத்து பகுதிக்கும் சீமை கருவேல மரங்கள் பரவுகின்றன.இதேபோன்று, பிற தாவரங்களை வளர விடமால் தடுக்கும், 'மோண்டனா ஹிமிசிக் போலியா' செடிகள் பரவலும் அதிகரித்துள்ளது. இதனால், தாவரஉண்ணிகளுக்கு, உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, யானை, மான், காட்டெருமை உட்பட விலங்குகள் பல கி.மீ., துாரம் பயணித்து, விளைநிலங்களுக்கு வருகின்றன. மனித-வனவிலங்கு மோதலுக்கு, இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
தொலைநோக்கு இல்லை
வனப்பகுதியில், குளிர் மற்றும் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பின்போது, அங்குள்ள களைச்செடிகள் குறித்த விபரங்களும் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், களைச்செடிகளை அகற்ற, வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெயரளவுக்கே, களைச்செடிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தொலைநோக்கு திட்டங்கள் எதையும் வனத்துறை செயல்படுத்துவதில்லை. அரிய வகை தாவரங்கள் மற்றும் தாவர உண்ணிகளை பாதுகாக்க, தொலைநோக்கு திட்டத்தை வனத்துறை செயல்படுத்துவது அவசியமாகும்.
ஒன்றாக இணைந்து அழிப்போம்!
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:
மானாம்பள்ளி, வால்பாறை பகுதிகளில் அதிகளவு களைச்செடிகள் பரவியுள்ளது. வால்பாறையில் இருந்து ஆழியாறு நோக்கி பரவி வருகிறது. இதை தடுக்க, தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு செடியில், 570 கிராம் பூக்கள்; ஒரு பழத்தில், 67 விதைகள் உள்ளன. அதன் அடிப்படையில், 1.2 டன் பூக்கள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட பூக்கள், விதைகள் உலர வைத்து எரிக்கப்படும்.
பார்ப்பதற்கு அழகாக காட்சியளித்தாலும், இக்களைச்செடிகள் ஆபத்தானது. எனவே, தன்னார்வலர்கள் உதவியுடன் இவற்றை அகற்ற திட்டமிட்டுள்ளோம். ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள், உயிரியலாளர் அன்வர் - 88832 26662, பாரஸ்டர் சத்யா - 98425 95826 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். வனத்தை பாதுகாப்பது அனைவரது கடமையாகும். அனைவரும் முயற்சி எடுப்போம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE