வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் இந்த மாதமே, 34 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் நிலவுவதால், மக்கள் வெயிலில் இருந்து பாதுகாக்க, சித்த மருத்துவ துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் மக்கள், 'இப்போதே உடல் வியர்வையில் முழுதும் நனையும் அளவுக்கு வெயில் கொளுத்துது; இனி, கோடையை எப்படி எதிர்கொள்ளப்போறோம்னு தெரியல,' என, புலம்பும் அளவுக்கு கடும் வெயில் நிலவுகிறது. வழக்கமாக மார்ச்., இறுதி முதல் மே., வரையிலான கோடையில், அதிக வெயில் நிலவும்; அதிலும், அக்னி நட்சத்திரம் துவங்கி, ஏப்., முதல் மே, வரையில், 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டியெடுக்கும்.

ஜன., முதல் மார்ச் வரையில் ஓரளவுக்கு மட்டுமே வெயில் நிலவும்; அதிகபட்சமாக, 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மட்டுமே வெயில் நிலவும்.ஆனால், நடப்பாண்டு ஜன., துவக்கத்திலேயே கடும் வெயில் நிலவுகிறது. தற்போதே, 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, சித்த மருத்துவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
கோட்டூர் அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் வித்யாதேவி கூறியதாவது: வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்துக்கள் குறைந்து மலச்சிக்கல், வியர்குரு, காலில் பித்த வெடிப்பு, தோல் 'அலர்ஜி', வேநீர் கட்டி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை தவிர்க்க, சர்க்கரை, ஐஸ் போடாமல் அதிக அளவில் பழச்சாறு குடிக்க வேண்டும்; நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் குடிக்க வேண்டும்.மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது; குறிப்பாக, 12:00 முதல் 3:00 மணி வரையிலான கடும் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

அதீத வெப்பத்தால் முதியவர்களுக்கு வெப்ப தாக்குதல் (ஹீட் ஸ்ட்ரோக்) வர அதிக வாய்ப்புள்ளது; முதியவர்கள் மதிய நேரம் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும் தண்ணீர், குளிர்ச்சியான பானங்களை குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.நீரின் அளவு குறைவதை தவிர்க்க தினமும், நான்கு முதல் ஐந்து லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். கம்பில் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் குறையும்.
நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரல் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடையும்.இரவில் ஒரு ஆளுக்கு, 30 கிராம் சீரகத்தை வறுத்து, மூன்று லி., தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அடுத்த நாள் முழுவதிலும் அந்த நீரை குடிக்கலாம். வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெயில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெயை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE