வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடந்த ஆண்டில், இரண்டு பருவமழைகளின்போதும், கோவை நகரில் மிக அதிகளவில் மழை பெய்ததால், ஏற்கனவே பழுதாகியிருந்த ரோடுகள், மேலும் மோசமாயின. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவை நகரில் ரோடுகள் சீரமைப்புப் பணி எதுவும் நடைபெறவில்லை.
நிதிச்சுமையால் தடுமாற்றம்
நிதிச்சுமை காரணமாக, ரோடு சீரமைப்புப்பணி உள்ளிட்ட 150 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து விட்டது. இதனால், நகருக்குள் இருக்கும் மாநகராட்சி பெரும்பாலான ரோடுகள் படுமோசமாக மாறியுள்ளன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், கேபிள் பதிப்பு, குடிநீர்த் திட்டத்துக்கான குழாய்கள் பதிப்பு, பாலங்கள் கட்டும் பணி என ஏராளமான வளர்ச்சிப் பணிகளுக்காக, ரோடுகள் தாறுமாறாக தோண்டப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை சீரமைக்கப்படவே இல்லை.பிரதான ரோடுகளை விட, தெருக்களுக்குள் இருக்கும் ரோடுகளின் நிலைமை, மேலும் கவலைக்கிடமாக உள்ளது. பல வீதிகளில், வண்டியை உருட்டிக்கொண்டும், நடந்தும் கூட போக முடியாத அளவுக்கு கரடு, முரடாகவும், மேடு பள்ளங்களாகவும் ரோடுகள் உருக்குலைந்து கிடக்கின்றன. மாநகராட்சி ரோடுகள் மட்டுமின்றி, தேசிய, மாநில நெடுஞ்சாலை ரோடுகளும் மோசமாக மாறியுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடுகளில், சத்தி ரோட்டைத் தவிர, மற்ற ரோடுகளில் பாலங்கள் கட்டப்படுவதால், அங்கும் ரோடுகள் பயன்படுத்தவே முடியாத அளவில் உள்ளன. அதிலும் திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு இரண்டும் படுகேவலமாக இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்து, மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளான அவினாசி ரோடு, தடாகம் ரோடு, என்.எஸ்.ஆர்., ரோடு, புரூக்பாண்ட் ரோடு, பாலசுந்தரம் ரோடு, தொண்டாமுத்துார் ரோடு உள்ளிட்ட நகரின் பல ரோடுகளும், பெரிய பெரிய குழிகளால் வாகனங்களை வீழ்த்தி வருகின்றன.
ஒட்டுப்போடும் வேலையும் அரைகுறை
சில ரோடுகளில் மட்டும், ஒட்டுப் போடும் வேலை நடந்துள்ளது. அவையும் சின்ன மழைக்கே பெயர்ந்து விட்டன. தற்போது மழை நின்றிருக்கும் நிலையில், சிறப்பு நிதி ஒதுக்கி, இந்த ரோடுகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.ஆனால், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் வாக்குறுதிகள் தருகின்றனரே தவிர, வேறெந்த வேலையும் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் நகரில் வாழும் பல லட்சம் மக்களும் தினமும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு கேட்டால் அவ்வளவுதான்!
தற்போதுள்ள சூழ்நிலையில், கோவை நகருக்குள் பல வீதிகளில் உள்ளே சென்று ஓட்டுக் கேட்டுப் போகவே முடியாது என்கிற அளவில் ரோடுகள் இருப்பதால், ஆளும்கட்சியினர், மக்களின் அதிருப்தியை நினைத்து, கடும் அச்சத்தில் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மாநகர ரோடுகளை சரி செய்யாவிட்டால், ஆளும்கட்சியினர் ஓட்டுக் கேட்டு ஊருக்குள் செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது; வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதே, தற்போதுள்ள கள நிலவரம்.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE