சென்னை:யானை தந்தங்களை கடத்திய நான்கு பேரை, வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தில் இருந்து, யானைகளின் தந்தங்கள், நட்சத்திர ஆமைகள் போன்றவை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்துாரில், கடத்தல் தந்தங்கள் இருப்பு வைக்கும் இடம் என கண்டறியப் பட்ட பகுதிகளில், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இங்கிருந்து, ஒரே யானையின் இரண்டு தந்தங்களுடன், சிலர் சென்னைக்கு வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
சென்னைக்குள் நேற்று, ஒரு ஆட்டோ, ஒரு ஸ்கூட்டரில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நான்கு தந்தங்கள் இருந்தன. நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தந்தங்கள், ஆட்டோ, ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தந்தங்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட இருந்தன, கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE