கிருஷ்ணகிரி: சந்தையில் தக்காளி விலை குறைந்து வருவதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், 52 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், தமிழக அளவில் தக்காளி விற்பனை சந்தையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதலிடத்திலும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. இங்கிருந்து, சென்னை, கோவை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரளாவுக்கும் அதிகளவில் தக்காளி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு நவ.,ல் பெய்த கனமழையால், தக்காளி சாகுபடி பாதித்ததால், ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாயை தாண்டி விற்றது. தொடர்ந்து விலை ஏறுமுகமாக இருந்ததால், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டது. இதனால் அதன் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ, 40 ரூபாய் என விற்ற நிலையில், இந்த வாரம், 20 ரூபாயாக குறைந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தற்போது விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE