நியூயார்க் : மனித மூளையில் சிறிய 'சிப்' எனப்படும் சாதனத்தை பொருத்தி, இயந்திரங்கள் வாயிலாக அதைக் கட்டுப்படுத்தும் முறைக்கான மருத்துவப் பரிசோதனையை விரைவில் துவக்க, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் 'நியூராலிங்க்' நிறுவனம் தயாராகி வருகிறது.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர். விண்வெளிக்கு சுற்றுலா பயணம், தானாக இயங்கும் கார் என பல புதுமையான கண்டுபிடிப்புகளை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நியூராலிங்க் என்ற நிறுவனத்தில், மிகப் பெரிய முதலீட்டை எலான் மஸ்க் செய்துள்ளார். இந்த தொழில்நுட்பம்வாயிலாக மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும்.

அதை கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். இந்த சாதனங்களை கையால் தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும். மேலும், மனித மூளை நினைப்பதை இந்த சாதனங்களில் பதிவு செய்ய முடியும்.மூளையில் ஏற்படும் பாதிப்புகளை இந்த சிப் உதவியால் சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது.
கடந்த 2017ல் இந்த ஆய்வு குறித்து எலான் மஸ்க் அறிவித்தார். அந்த நிறுவனம், பன்றிகள் மற்றும் குரங்குகளில் பரிசோதனை செய்துள்ளது. தற்போது மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளை துவக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக மருத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்த இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விரைவில் அனுமதிபெற்று மருத்துவப் பரிசோதனைகள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE