புதுடில்லி,-ரயில்களில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில்களில் பயணியர் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் பயணம் செய்ய ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்களில் பயணியர் சிலருக்கு சத்தமாக பேசுவதும், சத்தமாக பாட்டு கேட்பதும் வழக்கமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சக பயணியரால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை.
இதையடுத்து ரயில் பயணத்தின் போது சத்தமாக பேசும், சத்தமாக பாட்டு கேட்கும் பயணியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது பயணியருக்கு ஏதாவது வசதி குறைவு ஏற்பட்டால், அதற்கு ரயிலில் உள்ள ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், ரயிலில் ஒரு குழுவாக பயணிப்போர் நள்ளிரவு வரை பேச அனுமதிக்கபட மாட்டார்கள். ரயில்களில் இரவு நேர விளக்குகளை தவிர மற்ற மின் விளக்குகள் இரவு 10:00 மணிக்கு அணைக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE