மரக்காணம் : மரக்காணம் இ.சி.ஆரில் கார் பந்தயத்தில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுாரைச் சேர்ந்தவர் பிரின்ஸ், 20; இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, இனோவா கிரிஸ்டா காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 22; இவரது நண்பர்கள் அஜித், 26; ஷேக் ஷாதிக், 22; பாலமுருகன், 26; வினோத், 26 ஆகியோர், வோக்ஸ் வேகன் விண்டோ காரில் புதுச்சேரியில் இருந்து மரக்காணம் சென்றனர். காரை அஜித்குமார் ஓட்டினார்.
அனுமந்தை சுங்கச்சாவடி அருகே பிரின்சிடம், அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள், எங்களுடன் கார் பந்தயத்திற்கு வருகிறாயா என கூச்சலிட்டு அழைத்துள்ளனர். பிரின்சும் ஒப்புக் கொண்டுள்ளார்.இருவரும் இ.சி.ஆரில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளனர்.
இதில், பிரின்ஸ் வெற்றி பெற்றுள்ளார். மரக்காணம் தீர்த்தவாரி அருகே பிரின்ஸ் காரை மறித்து, அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் பிரின்சிடம் தகராறு செய்து, அவரிடமிருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.பிரின்ஸ் புகாரின்படி, மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து, அஜித்குமார்,
வினோத், அஜித், ஷேக் ஷாதிக் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான பாலமுருகனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE