சென்னை-'தமிழகத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதை எதிர்ப்பதை கர்நாடக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 1986ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, 120 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரானது.கடந்த 1994ல் ஜெயலலிதா ஆட்சியில், 350 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான திட்ட அறிக்கை தயாரானது. போதிய நிதியுதவி கிடைக்காததால், அத்திட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தத் திட்டத்திற்கு, கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஒகேனக்கலில் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தி.மு.க., ஆட்சி காலத்தில், மூன்று ஆண்டுகளில் 18 சதவீத பணிகளே முடிந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 82 சதவீதம் பணிகளை முடித்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முழு காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.தமிழகத்தில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதை எதிர்ப்பது என்பதை, கர்நாடக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்திற்குள் மேற்கொள்ள உள்ள ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த, தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் தமிழகத்திற்கு உண்டு. இதை அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு அ.தி.மு.க., தன் முழு ஆதரவை நல்கும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE