புவனகிரி : புவனகிரி அருகே சமையல் செய்த போது கூரை வீடு தீப்பற்றியதில் மூதாட்டி எரிந்து சாம்பலானார். இச்சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த மஞ்சக்கொல்லையைச் சேர்ந்தவர் காசிராஜன்,78; விவசாயி. இவரது மனைவி ருக்மணி,70; இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். மஞ்சக்கொல்லை மெயின் ரோட்டில் கூரை வீட்டில் வயதான தம்பதியினர் மட்டும் தனியாக வசித்தனர். ருக்மணி பார்வை குறைபாட்டுடன், செவித்திறன் குன்றியும் இருந்தார்.
மேலும் இரு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார்.நேற்று மாலை 5.00 மணிக்கு உடல் நிலை சரியில்லாத மனைவிக்கு மாத்திரை வாங்க அருகிலுள்ள மெடிக்கலுக்கு காசிராஜன் சென்றார். வீட்டில் சமையல் செய்த ருக்மணி, காய்ச்சலில் அடுப்பை எரிய விட்டு அருகில் படுத்திருந்தார். அருகிலேயே அடுக்கி வைத்திருந்த விறகில் தீப்பற்றி வீடு எரியத் துவங்கியது. வீடு எரிய துவங்கியதால் காய்ச்சலில் படுத்திருந்த மூதாட்டி வெளியே வர முடியாமல் அலறினார்.அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
சேத்தியாத்தோப்பு தீயணைப்பு துறையினர் வந்து போராடியும் மூதாட்டியை உயிருடன் மீட்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் ருக்மணி எரிந்து சாம்பலானார். தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் சென்று விசாரணை நடத்தினார். தீ விபத்தில் மூதாட்டி எரிந்து கரிக்கட்டையாக காட்சியளித்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE