சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து, தமிழக பா.ஜ., ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ.,வின் மைய குழு கூட்டம், நேற்று நடந்தது. நிர்வாகிகள் 11 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விவரம் குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகம் முழுதும் பா.ஜ.,வுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, கட்சியினர் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்துள்ளனர். நேர்காணலின் போது, தி.மு.க.,வின் அதிகார பலத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பலரும் தனித்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது, தி.மு.க., அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதுதொடர்பாக, டில்லி மேலிடத்திடம் பேசப்படும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியா, தனித்து போட்டியா என்பது குறித்து, சில தினங்களில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE