வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: நிதித்துறையின் உத்தரவால், மாநிலத்தில் உள்ள 25 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை சம்பளத்தில், எட்டுமாத நிலுவைத் தொகை கிடைக்க உள்ளது. இதனால், அரசுக்கு ரூ.150 கோடி செலவாகும்.புதுச்சேரி மாநிலத்தில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்தாண்டு காங்., ஆட்சி கவிழ்ந்ததால், மத்திய அரசே நேரடியாக, 5 மாத இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று, ரூ.9,924.41 கோடிக்கு வரியில்லா பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி கடந்த ஆக., 26ம் தேதி தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருப்பினும் எதிர்பாராத செலவு, வருவாய் குறைவு, திட்ட செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பட்ஜெட் மதிப்பீட்டிற்கும், துறைகளின் நடைமுறை செலவினத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்படும்.
இதனை, நிதியாண்டின் இறுதியில் அரசு திருத்திய பட்ஜெட் மேற்கொண்டு, நிதி நிலை சரி செய்யப்படும்.புதுச்சேரியில், வரும் 2022-23ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய இரண்டு மாதங்களே உள்ளது.
இந்த நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் எவ்வளவு செலவிடப்பட்டது, மீதம் உபரி தொகை எவ்வளவு உள்ளது, பற்றாக்குறை எவ்வளவு உள்ளது என விவரம் கோரி, அனைத்து துறைகளுக்கும் நிதித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில், துறை ரீதியான வரவு-செலவு விபரத்தை வரும் 28ம் தேதிக்குள் 'ஆன்-லைனில்' அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப் படுத்தவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு, சமரசம் போன்ற உறுதியான செலவினங்களை ஒத்திவைக்கக் கூடாது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் அதாவது 31.03.2022க்குள் ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்குவதை துறைகள் உறுதி செய்ய வேண்டும்.
தவறினால், ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகைக்காக 2022-23 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பட்ஜெட் மற்றும் திருத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையை, எந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த நிதியை வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, திருத்திய பட்ஜெட்டிற்கான பணிகளை, அனைத்து அரசு துறைகளும் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளன.
அரசு துறைகளின் திருத்திய மதிப்பீடு கையில் கிடைத்ததும், நிதி அதிகம் உள்ள துறைகளிடம் இருந்து, தேவைப்படும் பிற துறை திட்டங்களுக்கு நிதி பகிரப்பட உள்ளது.அரசு ஊழியர்கள் மகிழ்ச்சிபுதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 1.1.2016 முதல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், புதுச்சேரி அரசு 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியது.
2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை தொகை வழங்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், நிலுவை தொகையை இந்த ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட்டிலேயே செட்டில் செய்ய நிதித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனால், ஏழாவது ஊதியக்குழுவின் 8 மாத நிலுவைத் தொகை , 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைப்பது உறுதியாகி உள்ளதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதன் மூலம், மாநிலம் முழுதும் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவர். இதனால், அரசுக்கு ரூ.150 கோடி வரை கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE