புதுடில்லி:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தொழில்நுட்பம் சாராத பிரிவினருக்கான முதன்மை தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, பீஹாரில் இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.
ரயில்வே துறை காலிபணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதன்படி தொழில்நுட்பம் சாராத பிரிவுகளுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு 2019ல் வெளியானது. கணினி வாயிலான முதன்மை தேர்வுகள் நடந்த நிலையில், சமீபத்தில் அதன் முடிவுகள் வெளியானது.இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இந்நிலையில் தேர்வு முடிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, அதில் பங்கேற்றவர்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து தேர்வு முடிவுகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:சமீபத்தில் வெளியான தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகளுக்கு எதிராக, அதில் பங்கேற்றோர் போராட்டம் நடத்தினர். இதனால் தேர்வு மீதான அடுத்தகட்ட பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.முதன்மை தேர்வில் பங்கேற்றோர் தெரிவிக்கும் புகார்களை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தங்கள் கருத்துகளை பிப்., 16 வரை தெரிவிக்கலாம். அவற்றை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை மார்ச் 4ம் தேதிக்குள், ரயில்வே அமைச்சகத்திடம் உயர்மட்டக் குழு தாக்கல் செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே ரயில்வே தேர்வில் பங்கேற்றோர், பீஹாரின் கயா ரயில் நிலையத்திற்கு திரண்டு வந்து, அங்கு நின்ற ரயிலுக்கு தீ வைத்தனர். ரயில் நிலைய பொருட்களை சூறையாடிய அவர்கள், தண்டவாளத்தை சேதப்படுத்தினர்.ரயிலில் பற்றிய தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். வன்முறையில் ஈடுபட்டோரை, ரயில்வே போலீசார் அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது நல்லதல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE