அரூர்: அரூர் கல்வி மாவட்டத்தில், நேற்று முன்தினம் முதல், மலைகிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கான ஆசிரியர் கலந்தாய்வு, மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. கலந்தாய்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி, நேற்று ஆசிரியர்கள் கல்வி அலுவலகம் முன் குவிந்தனர். தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவியுடன், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து, பெயர் கூற விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆசிரியரும் சுழற்சி முறையில் மலைகிராம பள்ளிகளில் ஓராண்டு கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், பலர் மலைகிராம பள்ளியில் பணிபுரியாமல், தரை பகுதி பள்ளிகளிலேயே தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர். மேலும் சிலர், ஒரே பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல், சிலர் பதவி உயர்வு மற்றும் தங்கள் வசதிக்காக மலைகிராம பள்ளிகளில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், பல ஆசிரியர்கள் அங்கேயே பணிபுரியுமாறு நிர்ப்பந்தப்படுத்த படுகின்றனர். இதனால், அவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ரவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: சுழற்சி முறையில் மலைகிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓராண்டு கட்டாயம் பணிபுரிய வேண்டும். இது குறித்து அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், நல்ல முடிவு எட்டப்பட்டு, அனைவரும் திருப்தியாக சென்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE