காஞ்சிபுரம்,-குடியரசு தின விழாவின்போது மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு, மாவட்ட கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். இதில், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடைத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக பணிபுரிந்தோரை, அந்தந்த துறை சார்பில் தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் அனுப்பப்படும். கலெக்டர் தேர்வு செய்து, விழாவில் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவது வழக்கம்.காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு, யாருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.உதவியாளர்கள் கூறுகையில், 'மருத்துவர்கள் செய்ய கூடிய வேலைகளில் பெரும்பாலானவற்றை நாங்கள்தான் செய்கிறோம். எதற்காக புறக்கணிக்கப்படுகிறோம் என தெரியவில்லை' என்றனர்.மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் என, அனைத்து பிரிவுகளில் உள்ளவர்கள் பெயர்கள் பரிந்துரை செய்திருந்தேன். அவர்கள் பெயர் விடுபட்டுள்ளது தெரியாமல் நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE