மயிலாடுதுறை: அரசு பொங்கல் பரிசு சீட்டில் மட்டுமே உள்ளது. பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் அரசு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கே அப்பகுதிகளை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்றும், பலருக்கு பொங்கல் பரிசு வழங்காமல் வழங்கப்பட்டு விட்டதாக செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

மேலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட பல குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு வழங்கிய 21 பொருட்கள் வழங்காமல், பல பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டு, தராத பொருட்களை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து வேறொரு நாளில் வந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதுநாள்வரை அந்தப் பொருட்களை தராமல் கடை ஊழியர் அலைகழிப்பதாகவும், தங்களுக்கு வழங்கக்கூடிய அரிசியும் தரமற்று வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து கடை ஊழியரிடம் கேட்கும்பொழுது மரியாதை குறைவான வார்த்தைகளால் திட்டி அனுப்புவதாக கூறிய பொதுமக்கள், கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் மற்றும் வட்ட வழங்கல்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேசி உரிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE