சென்னை:'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்குக்கு வந்த, 64 வயது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு, 'சீட்' மறுக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், 64 வயதான முதுநிலை பட்டதாரியுமான, முனுசாமி என்பவர், நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்றார். அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற முனுசாமி, அரசு பள்ளியில் படித்தவர் என்பதால், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர விண்ணப்பித்தார்.
மேலும், எம்.எஸ்சி., தாவரவியல் மற்றும் எம்.எட்., முடித்த முனுசாமி, மருத்துவ படிப்பில் சேர கல்வி தகுதி பெற்றவர் என்பதற்கு, தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சார்பில், தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்ததற்காக, பள்ளிக் கல்வித் துறை சார்பில், உறுதியளிப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.
முன்னிலை
இந்த சான்றிதழ்களுடன் மருத்துவ படிப்பில் சேர, கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தார். ஆனால், மருத்துவ தர வரிசை பட்டியல் வெளியானபோது, முனுசாமி பெயர் இல்லை. பின் முனுசாமி, மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகளை சந்தித்து, சான்றிதழ்களை சமர்ப்பித்தார். இதையடுத்து, தர வரிசை திருத்த பட்டியல் வெளியானது. அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் இடம் பெற்றார். நேற்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்க, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங் நடக்கும், ஓமந்துாரார் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார்.
இடம் மறுப்பு
மருத்துவ கல்வி அதிகாரிகள், அவர் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என கூறினர். அவர், பழைய பாடத்திட்டத்தில், பி.யூ.சி., என்ற பட்டப் படிப்புக்கு முந்தைய படிப்பை, அரசு உதவி பெறும் விவேகானந்தா கல்லுாரியிலும் படித்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை என, தெரிவித்தனர்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் முனுசாமி, மருத்துவ இடம் கிடைக்காமல் வெளியேறினார். இது குறித்து அவர் கூறுகையில், ''அரசாணைப்படி எனக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இதை சட்ட ரீதியாக பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE