கடலுார் : கடலுார் மாநகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களிடம் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிப்., 19ம் தேதி நடக்கிறது. கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகளில் தி.மு.க., சார்பில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம் ஏற்கனவே விருப்ப மனுத் தாக்கல் பெறப்பட்டது.
மனுத் தாக்கல் செய்தவர்களிடம் கடலுாரில் நேர்காணல் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் வார்டு வாரியாக மனு கொடுத்தவர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார். அப்போது, அவர் பேசுகையில், ' ஒரே வார்டில் போட்டியிட பலர் மனு செய்துள்ளீர்கள். இருப்பினும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும், வார்டு பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு அளித்து கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்து, கடலுார் மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும். தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்' என்றார். எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE