சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 40 நாட்கள் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை மாநில தேர்தல் கமிஷன் நாடியுள்ளது.தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இதில், 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2019 டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, 2021 அக்டோபரில் தேர்தல் நடந்தது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்டு உள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள்அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம், ஜன., 26 வரை அவகாசம் வழங்கியது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிப்., 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என, கடந்த 26ல் மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் முறைப்படி வெளியிட்டார். அதேநாளில், தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்க, உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவுக்கு வந்தது.
![]()
|
இந்நிலையில், தேர்தலை நடத்தி முடிக்க 40 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் மனு செய்துள்ளது. இது அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சையாக போட்டியிட உள்ளவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்கவில்லை. ஏற்கனவே, தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.அதன்படி, தேர்தலை நடத்தி முடிக்க 40 நாட்கள் ஆகும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்த கெடு முடிந்ததால், 40 நாட்கள் அவகாசம் கேட்டுஉள்ளோம்.இந்த வழக்கு விசாரணைக்கு வர இரண்டு வாரங்கள் ஆகும். அதற்குள், தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE