பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 2021-22ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளில் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மாநில எல்லைப் பகுதியான மஞ்சள்மூலா குக் கிராமத்தைச் சேர்ந்த மனோகர் நிதின் 19, மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அம்பலவயல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலை வகுப்பு அம்பலமூல அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்துள்ளார். கடந்த 2020-21 ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு, எழுதினார். அதில் வெற்றி பெற்றபோதும் முன்னுரிமை கிடைக்காத நிலையில் மீண்டும் சுயமாக படித்து நீட் தேர்வு எழுதினார். இதில் 342வது இடம்பிடித்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ளார். இவரின் தந்தை பிரகாசன் மாடு வளர்ப்பதுடன், விவசாய தொழிலும் மேற்கொண்டு வருகிறார். தாயார் அனிதா கணவனுக்கு துணையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மாணவன் நிதின் கூறுகையில், ஆர்வத்துடன் படித்தால் சாதிக்க முடியும் . நான் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி சுயமாக படித்து, நம்பிக்கையுடன் நீட் தேர்வு எழுதியதால் வெற்றி பெற முடிந்தது என்றார். மேலும் இதே பள்ளியில் படித்த, அய்யங்கொல்லி பரிவாரம் பகுதியைச் சேர்ந்த மாணவி அனகா 18, சுயமாக வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில், 543 வது இடம் பிடித்து பல் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். இவரின் தந்தை பாலச்சந்திரன் விவசாயம் செய்து வருகிறார்.தாயார் பிரதீபா 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலைக்கு செல்கிறார். இவர்களின் இருவரின் வீடுகளும் போதிய சாலை வசதி இல்லாததுடன், நெட்வொர்க் சேவை இல்லாமலும், வீடு வசதி கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் சாதாரணமான மாணவராலும் முடியும் என்பதை வெளிக்காட்டி உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா, நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முகமது சாதிக் மற்றும் ஆசிரியர்கள், பி.டி.ஏ. தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.--மாணவி அனகாவின் படம் மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE