26 ஆண்டுக்கு முன் விண்ணப்பித்தவருக்கு இப்போது தான் மின் இணைப்பு| Dinamalar

26 ஆண்டுக்கு முன் விண்ணப்பித்தவருக்கு இப்போது தான் மின் இணைப்பு

Updated : பிப் 08, 2022 | Added : பிப் 08, 2022 | கருத்துகள் (6) | |
சென்னை: விவசாய மின் இணைப்பு கேட்டு, 1995ல் விண்ணப்பித்தவருக்கு, தற்போது இணைப்பு வழங்க, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் மின்குறை தீர்ப்பாளர் தேவராஜன் உத்தரவிட்டுஉள்ளார்.தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால், குறித்த காலத்தில் மின் இணைப்பு வழங்குவதில்லை. இதனால், பலரும் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு
TNEB, EB Connection, Tamilnadu, மின் இணைப்பு, விண்ணப்பம்

சென்னை: விவசாய மின் இணைப்பு கேட்டு, 1995ல் விண்ணப்பித்தவருக்கு, தற்போது இணைப்பு வழங்க, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் மின்குறை தீர்ப்பாளர் தேவராஜன் உத்தரவிட்டுஉள்ளார்.

தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால், குறித்த காலத்தில் மின் இணைப்பு வழங்குவதில்லை. இதனால், பலரும் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இணைப்பு வழங்கும் முன் தயார் நிலையில் இருக்குமாறு, மின் வாரியம் சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்படும்.திருச்சியை சேர்ந்த கண்ணன், புதுக்கோட்டையில் உள்ள தன் நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு, 1995ல் கீரனுாரில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.



latest tamil news

அவருக்கு தயார் நிலையில் இருப்பதற்கான நோட்டீஸ், 2010ல் வழங்கப்பட்டு உள்ளது.மின் இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட மனுதாரர், புதுக்கோட்டை மின் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு அளித்த தீர்ப்பை ஏற்காத அவர், ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்துஉள்ளார்.அதை விசாரித்து குறை தீர்ப்பாளர் தேவராஜன் விடுத்த உத்தரவு:விண்ணப்பதாரர் தன் தயார் நிலையை பதிவு செய்யாதபட்சத்தில், 90 நாட்கள் அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் கடந்த விவசாய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். ரத்து செய்த விபரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.



மேல்முறையீட்டாளரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகவோ, அதுபற்றி அவருக்கு தெரிவித்ததாகவோ, எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. மேல்முறையீட்டாளரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாக கருத முடியாது.விண்ணப்பம் பதிவு செய்து, 26 ஆண்டுகள் கடந்தும், விண்ணப்பம் ரத்து செய்யப்படாத நிலையில், தற்போது மின் இணைப்பு வழங்க மறுப்பது ஏற்க முடியாது.



latest tamil news

மறுபடியும் புதிய விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டுமெனில், தற்போது இருந்து, 15 ஆண்டுகள் மேல்முறையீட்டாளர் மின் இணைப்பு பெற காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய நடவடிக்கை சாதாரண விவசாயிக்கு இழைக்கப்படும் அநீதி. விதிகளின்படி தேவைப்படும் ஆவணங்களை பெற்று, 1995ம் ஆண்டு பதிவு எண்ணின் படி விவசாய இணைப்பு வழங்க வேண்டும். ஆவணங்களை சமர்ப்பித்த தேதியில் இருந்து, 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க ஆணையிடுகிறேன். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X