பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசிக்கு நேரில் வரும்படி அனுப்பிய, 'சம்மனை' அடுத்து, இருவரும் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர் இளவரசி இருவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் விடுதலையாகினர்.
சிறையில் இருக்கும் போது, சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள், ௨ கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி, 2017ல் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
கர்நாடக அரசு அமைத்த விசாரணை கமிஷன் அறிக்கையிலும், சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாநில அரசு, ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் விசாரணை தாமதமானது.
இது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை அடுத்து, ஊழல் ஒழிப்பு போலீஸ் தரப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 7ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ன
இதையடுத்து, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, போலீசார் சுரேஷ், கஜராஜ மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.
சசிகலா, இளவரசி ஆகியோர் மீதும், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், 24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மார்ச் 11ல் நேரில் ஆஜராகும்படி, சசிகலா, இளவரசி, கிருஷ்ணகுமார், அனிதா, கஜராஜ மகனுார் ஆகிய ஐந்து பேருக்கும், 'சம்மன்' அனுப்ப பிப்ரவரி 11ல், நீதிபதி லட்சுமி நாராயணன்பட் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இன்று காலை சசிகலா, இளவரசி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் சிறையில் இருந்து விடுதலை ஆகி ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில் மீண்டும் பெங்களூரு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE