பெரம்பலுார்: உயர் அதிகாரிகளின் டார்ச்சரால், அரியலுார் மாவட்டத்தில் எஸ்.ஐ., உட்பட இரண்டு பெண் போலீசார் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் லட்சுமிபிரியா, 30. இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவரும் போலீசாக பணியாற்றி வருகிறார்.உயர் அதிகாரியிடம் அனுமதி பெறாமல், லட்சுமி பிரியா மார்ச் 5 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். இதனால் திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிக்கு, அவரை இடம் மாற்றம் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, லட்சமிபிரியா சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அந்த அதிகாரி, அவருக்கு 'டார்ச்சர்' கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமிபிரியா, 9ம் தேதி காலை பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு பணிக்கு வந்துள்ளார்.
செந்துறை பிரிவு சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மயங்கி விழுந்தார். சக போலீசார் அவரை மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே போல, அரியலுார் மாவட்டம், குவாகம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மனைவி பிரியங்கா, 28 அரியலுார் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம், உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, திடீரென குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தற்கொலை முயற்சிக்கும் உயர் அதிகாரி டார்ச்சர் காரணமாக கூறப்படுகிறது.பெண் எஸ்.ஐ., மற்றும் பெண் போலீசின் தற்கொலை முயற்சி சம்பவங்கள், அரியலுார் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.