திருவாரூர் : ஆரூரா தியாகேசா கோஷம் முழக்க.. திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக் கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித் தேருக்கு எழுந்தருளினார். அதிகாலை 5 மணிக்கு விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்ட தேர் என பெயர் பெற்ற, 300 டன் எடையும், 96 அடி உயரமும் கொண்ட ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து மாலை 5 மணி அளவில் ஆழித்தேர் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.