சென்னை: அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம்.

3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம். அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகும். தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழர்களின் ஆட்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறோம்; நாங்கள் என்று சொல்வது உங்கள் அனைவரையும் சேர்த்துதான். இவ்வாறு அவர் பேசினார்.