புதுடில்லி : ''முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டதே இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பார்லி.,யில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:
முந்தைய காங்., தலைமையிலான அரசின்போது, அரசியல் லாபத்துக்காக, வங்கிகளில் கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கிய கடன்கள் பல, வாராக் கடன்களாக மாறியுள்ளன. ஆனால், வாராக் கடன்களை வசூலிக்க ஒரு நடவடிக்கை கூட காங்., அரசு எடுக்க வில்லை.
அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பிறகு, இதுவரை, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் செயல்பாட்டுக்காக, வாராக் கடன்கள் கணக்கில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. ஆனால், தள்ளுபடி செய்யப்படவில்லை.
வாராக் கடன்களை வசூலிக்க அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சரின் பேச்சுக்கு, காங்.,கைச் சேர்ந்த கட்சியின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ''உண்மை கசக்கத்தான் செய்யும். அரசியல் லாபத்துக்காகவே, காங்கிரஸ் ஆட்சியின்போது, கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன,''என, நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE