பல்லன்வாலா: இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, 'சாகோ ஸ்னைப்பர்' என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொலைநோக்கி உதவியால், வெகு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடுவதற்கு, 'ஸ்னைப்பர்' துப்பாக்கிகள் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சாகோ நிறுவனம், அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.
இந்நிறுவனத்திடம் இருந்து, 'சாகோ 338 டி.ஆர்.ஜி. - 42' ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை, இந்திய ராணுவம் இறக்குமதி செய்துள்ளது. இவை, ஜம்மு - காஷ்மீர் எல்லை, சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு ஆகிய இடங்களில் பணியில் உள்ள ராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளன.

இது குறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:1990களில், ரஷ்யாவிடம் இருந்து 'டிரகுநோவ்ஸ்' ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை இந்தியா வாங்கியது. இதை விட மேம்பட்ட 'பெரட்டா, பர்ரட்' வகை ஸ்னைப்பர்கள், 2019, 2020ல் அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
தற்போது, இவற்றை விட மேம்பட்ட சாகோ ஸ்னைப்பர்கள், ராணுவத்தினருக்கு வழங்கப்படுகின்றன. 6 கிலோ எடையுள்ள இந்த துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா, 1,500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கி வீழ்த்த வல்லது.
சமீப ஆண்டுகளாக, இந்திய எல்லைப் பகுதிகளில், ஸ்னைப்பர் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பின்லாந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் பயிற்சி பெற, 10 ராணுவத்தினர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.