வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.
புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன்,22, முன்னாள் ராணுவ வீரர் பிரதாப்,36, அன்பழகன்,60, இவரது மகன் ராகவன்,24, நாகராஜ்,60, சந்தோஷ்,15, செல்வம்,56, ராஜ்குமார்,14, சாமிநாதன்,56, கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன்,48, கலியமூர்த்தி,40, ஹரிஷ் ராம்,10, நித்தீஷ் ராம்,13, மாதவன்,22, மோகன்,54, விஜய்,23, அரசு,19, விக்கி,21, திருஞானம்,36, ஹரிஷ்,11, மதன் மனைவி சுகுந்தா,33, பி. கௌசிக்,13, பரணி,13,ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்ற இடத்தை பார்வையிட்டார். சம்பவம் குறித்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி, ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‛தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகி விட்டது' என தெரிவித்தனர்.
புலன் விசாரணை
தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெறும். இப்போது தேர் இழுக்கும்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும்.

இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலும், 8 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஆறுதல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தினை முதல்வர் வாசித்தார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் ஸ்டாலின் மதுரை வழியாக தஞ்சாவூர் சென்றார். களிமேடு கிராமத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண நிதியையும் வழங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.