வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா - ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‛தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இருப்பதாகவும், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (மே 5) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா- சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்து.