வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குருவை சிஷ்யர்கள் சுமப்பது என்ன தவறு என பலர் பதிலுக்கு கேட்கின்றனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம. அருண் சுவாமிநாதன் கூறியதாவது:பல்லக்கை [Palantquine] சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால், "Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law". என மேற்படி சட்டப் பிரிவை படிக்கும் போது, 'மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமை மனிதர்களை பணியில் வைத்தலும் குற்றம் கூறுகிறது.
பட்டினப் பிரவேசத்தில் கொத்தடிமைகள் ஈடுபடுகிறார்களா? Forced labour மூலம் ஆதீனகர்த்தரை தூக்கி சென்றால் அது குற்றமாக கொள்ளலாம். சீடர்கள், தம்பிரான்கள், ஆதீன கர்த்தர் அவர்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட மெய்யன்பர்கள் தாமாக முன்வந்து பல்லக்கில் பிரவேசிக்க வைப்பது கொத்தடிமைகள் என்ற பொருளில் வருமா??

International Labour Organization (ILO) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின், 1930 ஆண்டின் கட்டாய தொழிலாளர் மாநாட்டின் படி, Forced Labour என்பதை கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.
"All work or service which is exacted from any person under the threat of a penalty and for which the person has not offered himself or herself voluntarily."
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இல், other similar forms of forced labour என்றே உள்ளது. இந்த வைபவத்தில் forced labour எவரும் இல்லை. இருப்பினும் அதே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 26(b)-ன் படி to manage Its own affairs in matters of religion; எனும் வகையில் மத சம்மந்தமான தனது தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து கொள்ள உரிமை அளிப்பட்டுள்ளதால், சைவ சமயத்தை சார்ந்த மட நிகழ்வில் கோட்டாட்சியர் தலையிட எவ்வித அதிகாரமுமில்லை.
ஒருவேளை இந்து மதத்தை வெளிப்படையாக வெறுக்கும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தாலும், பிரச்னை செய்ய முன் வந்தாலும் அவர்கள் மீது தான் கோட்டாட்சியர் CRPC படி நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வருவாய் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித அதிகாரமுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.